search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் கடல் மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து வந்து, அதனை கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    மாலையில் சாயரட்சை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமிக்கு விடை ஆரத்தி பூஜை, அர்த்தசாம பூஜை நடந்தது.

    விழாவில் தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், நிர்வாகிகள் அழகானந்தம், ராஜமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

    Next Story
    ×