search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பக்தர்கள் 1 மணி நேரம் முன்னதாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதாரண நாட்களில் இலவச தரிசனத்திற்கு காலை 8 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 1 மணி நேரம் முன்னதாக 7 மணி முதலே அனுமதிக்கப்பட்டனர்.

    இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் 32 கியூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    இதேபோல் ‘டைம்ஸ்லாட்’ தரிசன பக்தர்கள் 5 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால் மற்றும் அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தங்கும் விடுதிகளும் நிரம்பியது. மேலும் இடம் கிடைக்காத பக்தர்களை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கோவில் மைதானத்திலும், அமைனிட்டிஸ் காம்ப்ளக்சிலும் தங்க வைத்தனர். மேலும் இடம் கிடைக்காத பக்தர்கள் தங்கள் வாகனங்களில் படுத்து தூங்கினர்.

    நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ‘டைம்ஸ்லாட்’ முறைப்படி 32 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மேலும் 2 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×