search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்
    X

    ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்

    ‘கோவிந்தா’ கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலையில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 28-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று முன்தினம் காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். அன்று மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து, சித்திரை தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6.15 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.... கோவிந்தா....’ என்று பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து தேர் மீண்டும் காலை 9.45 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பகுதியில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டுநிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவையொட்டி நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    மேலும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர்.

    இன்று (சனிக்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து கொடியிறக்கப்படும். நாளை (ஞாயிற்றுக் கிழமை) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. 
    Next Story
    ×