search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா: தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா: தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 4-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 26-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 27-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 28-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 29-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×