search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறில், சப்தஸ்தான திருவிழா: கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு
    X

    திருவையாறில், சப்தஸ்தான திருவிழா: கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு

    திருவையாறில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய 7 ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் 7 ஊர்களில் இருந்து வந்த சாமி பல்லக்குகள் சங்கமிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    அதேபோல திருச்சோற்றுத்துறையில் உள்ள அன்னபூரணி உடனாகிய ஓதனவனேஸ்வரர் கோவிலிலும் சப்தஸ்தான திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நேற்று நடந்தது. இந்த கோவில் மூவரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்கு ஆறுமுகம், 12 கைகளுடன், 8 அடி உயரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் சப்தஸ்தான திருவிழாவுடன் தொடர்புடைய கோவில்களுள் 3-வது கோவிலாகும். சப்தஸ்தான திருவிழாவையொட்டி இந்த கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் நேற்று சாமி புறப்பாடானது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நடந்த அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், நாகை நீதிபதி மணிகண்டராஜா, மன்னார்குடி நீதிபதி சோமசுந்தரம், திருவையாறு ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் இளங்கோவன், பரம்பரை டிரஸ்டி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சப்தஸ்தான திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் ஏழூர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் சங்கமித்து, சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாமி பல்லக்குகள் 6 ஊர் திரும்பும் உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×