search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தாயுமானசுவாமி கோவிலில் தீர்த்தவாரி
    X

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தாயுமானசுவாமி கோவிலில் தீர்த்தவாரி

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 14-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து 15-ந்தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று காலை நடராஜர் தரிசனம் நடைபெற்றது.

    நேற்று மதியம் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடை பெற்றது. பின்னர் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) காலை திருக்குறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமியும், பல்லக்கில் அம்மனும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாயுமான அடிகள் உற்சவமும், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு 7 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும், நாளைமறுநாள்(திங்கட்கிழமை) இரவு பிச்சாடணார் வீதிஉலாவும் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி இரவு சண்டிகேஸ்வரர் வீதிஉலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×