search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்ரா பவுர்ணமி: ஒரே நாளில் வழிபட வேண்டிய 3 அம்மன்கள்
    X

    சித்ரா பவுர்ணமி: ஒரே நாளில் வழிபட வேண்டிய 3 அம்மன்கள்

    திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி நாளில் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து நடக்கும்.
    பவுர்ணமி என்றதும் உங்கள் அனைவருக்கும் கிரிவலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சித்ரா பவுர்ணமி தினம் கிரிவலத்துக்கு மட்டுமல்ல இதர வழிபாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்யவும், புனித நதிகளில் நீராடவும் சித்ரா பவுர்ணமி மிக மிக உகந்த நாளாகும்.

    இத்தகைய சிறப்புடைய சித்ரா பவுர்ணமி தினமான இன்று அம்மன் ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள். சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.

    மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த மூன்று அம்மன் ஆலயங்கள் பற்றி சென்னைவாசிகள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பார்கள். திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள்.

    திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.

    சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப்போல அமைந்து இருக்கிறார்கள். பொதுவாக சக்தியின் வடிவத்தை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்வார்கள். அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.

    இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள். அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது. இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப்பகுதியில் பசு தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

    அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவபெருமான் புற்றுவடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.

    சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்) வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.

    அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.

    அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான் அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக (புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்), கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக (மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்) ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.

    முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்கில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை. அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
    கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.

    மேலூர் திருவுடையம்மன் ஆலயம் பற்றி கூடுதல் தகவல்களை ஆலய செயல் அலுவலர் எம்.கிகிருஷ்ணமூர்த்தியிடம் 99768 49791 என்ற எண்ணிலும், கோவில் பணியாளர் ஏழுமலையை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.



    அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.

    பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது.

    மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும்.

    திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.

    இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
    இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.

    அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.

    வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

    இன்று வெள்ளிக்கிழமையன்று பவுர்ணமி தினம். எனவே மிக அரிதான அன்றைய தின வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாகன வசதி செய்து கொண்டு சென்றால் மூன்று ஆலயங்களுக்கும் எளிதில் சென்று வரலாம்.


    சகல சக்திகளும் தரும் 3 அம்மன் தரிசனம்


    இச்சா சக்தி

    விருப்பங்களை நிறைவேற்றுபவள், சவுந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.

    ஞான சக்தி


    அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவள்.

    கிரியா சக்தி

    வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.

    மூன்று அம்மன்களையும் பக்தர்கள் தரிசிப்பதற்காக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 9 வரை கோவில் நடை திறந்திருக்கும். 
    Next Story
    ×