search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பகல் 12.15 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திரதேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்று சிறிய தேர்களை பக்தர்கள் இழுத்து சென்றனர். தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பட்டத்து குருக்கள்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேர் முன்பு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் நகர முடியாமல் நின்றபோது பழனி கோவில் யானை கஸ்தூரி அதனை முட்டித் தள்ளியது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×