search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் 18-ந்தேதி தொடங்குகிறது
    X

    கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் 18-ந்தேதி தொடங்குகிறது

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம்.

    இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.

    திருக்கல்யாண திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். 22-ந்தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×