search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது
    X

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25-ந்தேதிகளில் தாயுமான ஈசர் திருமேனி மீது மாலை நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும். தாயுமானசுவாமிக்கு, மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) கி.பி.1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் கி.பி.16-ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.

    இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதே போல ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 20-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் சார்பில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×