search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது

    பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே பறக்கையில் குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. தங்க கொடிமரம் உடைய கோவிலான இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலையில் கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. மாத்தூர்மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றுகிறார்.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, பக்தி பஜனை, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் சாமி தேர், பிள்ளையார் தேர் என இரண்டு தேர்கள் உலா வருகின்றன. மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளலும், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×