search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகநாதர், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்
    X

    நாகநாதர், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்

    நாகநாதர், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மலைக்கோட்டை அருகே நந்திகோவில் தெருவில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் கற்பக விருட்ச வாகனம், காமதேனு, பூத, கமல வாகனம், கைலாச பர்வதம், அன்ன வாகனம், இடப வாகனம், யானை, பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 15-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. 16-ந் தேதி நந்தி வாகனம், சிம்ம வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நேற்று காலை 9.55 மணிக்கு மேஷ லக்னத்தில் பலவகையான பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி, அம்பாள் பிரியாவிடையுடன் சாமி தேரிலும், அம்பாள் அம்மன் தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் பஞ்ச மூர்த்திகள் முன்னே செல்ல தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடக்கு ஆண்டாள் வீதி, கீழ ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் நந்தி கோவில் தெரு வழியாக வலம் வந்த தேர், மீண்டும் மதியம் 1 மணியளவில் நிலையை அடைந்தது.



    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை மாசி மகம், நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு இடப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர்.

    நாளை(புதன்கிழமை) சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர். அன்று காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், இரவு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    இதேபோல, திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி காசிவிசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், சர்க்கார்பாளையம், திருவெறும்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரியும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    Next Story
    ×