search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
    X

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் உள்ளது. பழனி கிழக்கு ரத வீதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் லிங்க வடிவில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, பலி பூஜை ஆகியவை நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடிபூஜை நடந்தது.

    கொடிப் படம் கோவிலில் வலம் வந்து கொடிமரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.



    பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து திருக்கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும், மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திரு உலா காட்சியும் நடைபெற்றது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதன்பிறகு இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 19-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்னியா லக்னத்தில் திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 20-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சந்திரமவுலி, சுந்திர மூர்த்தி சிவம் மற்றும் கோவில் பண்டாரங்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×