
சூரியன், சந்திரன், நெருப்பு முதலியன திருக்கண்கள் ஆயின. முடி முதல் திருவடி வரை பேருடல் காட்சி அளித்தது. வாய் மறைகளாயின, அறிவுகள் காதுகள் ஆயின. பேருருவின் திருவுள்ளம் இறைவியாருடையது. இறைவன் ஆன்மாவாகினார். இத்தகைய பேருருவை கண்ட தேவர்கள் முருகப்பெருமானது முழு அளவையும் காண முடியவில்லை. முழுவடிவத்தையும் தங்களுக்கு காட்டுமாறு முருகனையே தேவர்கள் பலரும் வேண்டினர்.
தேவர்களுக்கு முருகக்கடவுள் அறிவுக் கண் தந்தார். அனைவரும் முருகனின் பெருவடிவம் முழுவதையும் கண்டு பேரின்பம் அடைந்தனர். இந்திரன் அசுரர்களை அழித்து, தனது பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என்று முருகப்பெருமானை வேண்டினான். முருகப்பெருமான் அப்படியே அருளுவதாக கூறினார். மேருமலையில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் கைலாயத்தை அடைந்தார். தேவதச்சன் அமைத்த அரியணையில் அமர்ந்தருளினார். அவர் எழுந்தருளிய மலை ‘கந்தவெற்பு’ என்ற நற்பெயரை அடைந்தது.