search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கிய போது எடுத்த படம்.
    X
    பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கிய போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி, அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்த நெல்மணிக்கதிர்கள் அங்கிருந்து மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பின்னர், பகவதி அம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்தினர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பதும், விளை நிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும். இதனால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் போட்டி, போட்டு நெற்கதிர் பிரசாதத்தை வாங்கினர்.

    நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு நேற்று பகவதி அம்மன் தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×