search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், அரோகரா கோஷம் முழங்க முத்துக் குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில், வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து 16 வகை அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்ச கவ்யபூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகையான சீர்வரிசை பொருட் கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனையும், அதன் பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து வள்ளி-தெய்வானைக்கு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை கோவிலில் கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் பூஜை முறை குருக்கள் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருவுலா காட்சி நடைபெற்றது. வெள்ளிரதம் நான்கு ரத வீதிகளில் உலா வந்து இரவு 10.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×