search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தைப்பூச குரு வழிபாடு
    X

    தைப்பூச குரு வழிபாடு

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும் ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை, வியாக்கிர பாதமுனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசப்புண்ணிய தினத்தன்று தான்.

    அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
    Next Story
    ×