search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது
    X

    வயலூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தைப்பூசமான அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது.

    மதியம் 12 மணியளவில் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்துக்குமாரசாமி புறப்பாடாகி உய்யகொண்டான் வாய்க்கால் செல்கிறார். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைவார். அன்று இரவு சர்வ அலங்காரத்துடன் முத்துக்குமார சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வயலூர் வழியாக வரகாந்திடலை வந்தடைவார். அங்கு மண்டகப்படி பெற்று கீழவயலூர் தைப்பூச மண்டபத்திற்கு வந்தடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமத்திற்கு வருவார்.

    22-ந் தேதி காலை 10.31 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர்் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 11 மணியளவில் 5 சாமிகளும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வந்தடையும். அங்கு சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு அன்றிரவு 7 மணியளவில், கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும். இதில் முத்துக்குமாரசாமி சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் மண்டபம் சென்றடைவார்.

    தைப்பூசத்தையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை சோமரசம்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ராணி ஆகியோரின் ஆலோசனையின்படி கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×