search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரியில் கட்டி முடிக்கப்பட்ட வெங்கடாசலபதி கோவிலை படத்தில் காணலாம்.
    X
    கன்னியாகுமரியில் கட்டி முடிக்கப்பட்ட வெங்கடாசலபதி கோவிலை படத்தில் காணலாம்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி தொடங்குகிறது

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்று வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதி நவதானியங்களை முளையிடுதல், மாலை 6 மணி முதல் 9 மணி வரை அங்குரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது.

    23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை யாகசாலை வாஸ்து, பஞ்சகவ்ய பிரசன்னம், மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை போன்றவையும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஹோமம் ஆகியவையும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஹோமம், ஜலாதிவாசம், திருமஞ்சனம் போன்றவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 4 மணி முதல் 7 மணி வரை சுப்ரபாதம், கும்பஆராதனை, நிவேதனம் ஹோமம், காலை 7 மணி முதல் 7.30 மணி வரை கும்பம் உற்சவமூர்த்திகள் வீதி உலா, 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நித்திய கைகர்யம், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சர்வ தரிசனம், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும்.

    கும்பாபிஷேகத்தன்று பகல் 12.30 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×