search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர், சிவகாமி சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த போது எடுத்தபடம்.
    X
    நடராஜர், சிவகாமி சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த போது எடுத்தபடம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு தீப மை வைக்கப்பட்டது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழாவில் நடராஜருக்கு தீப மை வைக்கப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி கடந்த 21-ந் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு தொடங்கி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலையும் ஏராளமானோர் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

    இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி மகா தீபத்தன்று 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தீப மை பிரசாதம் 5 நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள நாட்டிய வடிவிலான நடராஜர் சாமிக்கு பல்வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடந்தது.
    Next Story
    ×