search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் சீர்வரிசை
    X

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் சீர்வரிசை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் இன்று நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில் ரெங்கநாதர் சீர் வழங்குவதாக ஐதீகமாகும். சீர் வரிசை பெறுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வருவதும் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருவானைக்காவல் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இந்த சம்பிரதாய நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு பட்டாடைகள் உள்ளிட்ட வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் பச்சரிசி, பாசிப்பயறு உள்ளிட்ட நைவேத்திய பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட இருப்பதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×