search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் கோவிலில் மார்கழி பெருந்திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது
    X

    சுசீந்திரம் கோவிலில் மார்கழி பெருந்திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மார்கழித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 13-ந்தேதி காலை 18 பிடாகைகள், ஊர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளதாளம் முழங்க முத்துக்கொடை ஏந்தி வந்து திருக்கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான 14-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டபள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகள் செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம், திருவெம்பாவை பாராயணம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

    15-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருதல், 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திர சேகரர் வீதி உலா வருதலும், மாலை 5 மணிக்கு பக்தி இன்னிசை, 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    16-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், 8.30 மணிக்கு திருவெம்பாவை இசை, மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி, 10.30 மணிக்கு சாமி வீதி உலா வரும்போது, கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிசாமி, வேளிமலை குமாரசாமி, தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந்தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சாமி வீதி உலா வருதல், மாலை 6 மணிக்கு நெல்லை கண்ணனின் ஆன்மிக சொற்பொழி, இரவு 9 மணிக்கு கர்நாடக இன்னிசை, 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    18-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சியும், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு வீணை இசைக்கலைஞர் ராஜேஷ்வைத்திய நாதனின் இன்னிசை, 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    19-ந்தேதி காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சாமி உலா வருதல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7.30 மணிக்கு கத்ரி கோபால்நாத்தின் இன்னிசை, 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    20-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி உலா வருதல், மாலை 6.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கைலாசபர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    21-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதல், பேரம்பலம் கோவில் முன் நடராஜர் பெருமாள் ஆனந்த திருநடன காட்சியும், காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் நடராஜர் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்டாபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு இலக்கிய பேரூரையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.

    22-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலா வருதல், காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. இரவு 6.30 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி, மெல்லிசை நிகழ்ச்சி, 10 மணிக்கு இசை சங்கம், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

    23-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜர் மூர்த்தி வீதி உலா, 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு ஆராட்டு விழா ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல்இசை நாடக சங்கமும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×