search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகப்பெருமானுக்கு உகந்தவை
    X

    முருகப்பெருமானுக்கு உகந்தவை

    ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.
    சண்முக தத்துவம்

    சண்முகனுக்கு, ஆறுமுகம் என்பது நாம் அறிந்ததே. தெய்வங்களின் அம்சங்களாக அருள்புரியும் சண்முகனின் தத்துவம் இது. ஒரு முகம் மகாவிஷ்ணுவாகவும், இரு முகம் அக்னிக்கும், மூன்று முகம் தத்ராத்ரேயருக்கும், நான்கு முகம் பிரம்மாவுக்கும், ஐந்து முகம் சிவன், அனுமன், காயத்ரிதேவி, கணபதிக்கும் உரித்தாகி, ஆறாவது முகம் கந்தனுக்கு என்பதே சண்முகத் தத்துவமாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.

    ஆறு குண்டலினி தலங்கள்

    மனிதன் உயர்நிலையை அடைய, புற உடலில் உள்ள ஆறு சக்கரங்களை அடக்கியாள வேண்டியது அவசியமாகிறது. குண்டலினிகள் எனப்படும் இவைகளை சரியாக பயன்படுத்தியதால் தான், சிலர் மனித நிலையிலிருந்து மகான் நிலையை அடைந்தார்கள். நம் முருகனின் ஆறுபடை வீடுகள், ஆறு குண்டலினிகளாக விளங்குவது சிறப்பு. திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமிமலை - அனாகதம், திருத்தணிகை- விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை ஆகியவை ஆகும். இத்தலங்களில் உள்ள முருகனை நினைத்து விசாகம், பவுர்ணமி, கிருத்திகை நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்தால் மனித வாழ்வு உயர்வு பெறும்.

    மூன்று மயில் வாகனம்

    முருகனுக்கு வாகனம் மயில் என்பதை அறிவோம். ஆனால் மூன்று மயில்களாக கந்தனின் சரித்திரத்தில் உள்ளது தெரியுமா? மாங்கனி வேண்டி உலகை சுற்றி வந்த முருகனின் வாகனம் ஆன மயில் ‘மந்திர மயில்’ எனவும், சூரபதுமனை வதம் செய்ய சென்றபோது முருகனுக்கு வாகனமாக வந்த இந்திரன் மயிலாக கந்தனைத் தாங்கினான். அந்த மயில் ‘தேவ மயில்’ என்றும், சூரனின் அகங்காரம் அழித்து அவனை இருகூர் ஆக்கியதில் உருவான மயில் ‘அசுர மயில்’ எனவும் புராண செய்திகள் கூறுகிறது.

    சஷ்டி விரதம் மகிமை

    ஐப்பசி மாதம் வளர்பிறையில் இருந்து ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளிஅன்று வரும் அமாவாசையன்று முருகனை ஒருமனதாக நினைத்து, ஒருவேளை மட்டுமே உணவருந்தி, மனிதனின் தீய குணங்களான கோபம், குரோதம், காமம், பொறாமை போன்றவற்றை விலக்கி ஆறாம் நாள் கந்தனை வழிபடுவதே விரதத்தின் நியதி. அசுரர்களான சூரபதுமன் ஆணவ மலமும், தாரகாசுரன் மாயா மலமும், சிங்கமுகன் கன்ம மலமும் கொண்டு அகங்காரத்துடன் இருந்ததால், அவர்களை ஞானம் எனும் வேல் கொண்டு முருகப்பெருமான் வெற்றிகொண்டார். எனவே முருகப்பெருமானை நினைத்து வழிபடும் போது, நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் அழிந்து, ஞானம் என்னும் பெருவாழ்வு கிடைக்கிறது.

    மும்மூர்த்திகளின் அம்சம்

    ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீரம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கும் திருமுகங்களைக் கொண்டவர் முருகன். இவர் பிரணவத்தின் சொரூபியாவார். ‘மு’ என்றால் முகுந்தன். ‘ரு’ என்றால் ருத்திரன். ‘கா’ என்றால் பிரம்மா. ‘முருகா’ என்று அழைக்கும்போது மூன்று தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும் சிவனின் அக்னியில் இருந்து தோன்றியதால் ‘சிவமே ஆறுமுகம்; ஆறுமுகமே சிவம்’ என்றும் பொருளாகிறது. கந்தனிடம் கையேந்தி விரதம் இருப்பவர்களின் கவலைகளை, அந்த ஈசனும் தீர்த்து வைப்பார் என்பது நிச்சயம்.

    முழுமையான தரிசனம்

    சூரனை அழித்து வதம் செய்த தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடும் இத்தல முருகனை, வருடம் ஒருமுறை இவ்விழாவின் போது ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கைகளும் கொண்ட மூர்த்தியாக முழுமையாக தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரம் அலங்கரித்திருக்கும். ஆகவே சஷ்டி விழா பக்தர்களின் வருகையால் சிறப்புமிக்கதாகிறது.
    Next Story
    ×