search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. #Sabarimala #AyyappanTemple
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். நடை திறக்கப்பட்ட மறுநாள் (17-ந் தேதி) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்படும். தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும்.

    அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

    அன்யை தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.#Sabarimala #AyyappanTemple
    Next Story
    ×