search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
    X
    சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூரில் கந்தச‌ஷ்டி: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌ஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. 7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள், தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 3.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் எழுந்தருளி, சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி மற்றும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×