search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கார்த்திகை தீபம்: மலைக்கோட்டை உச்சியில் 23-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
    X

    கார்த்திகை தீபம்: மலைக்கோட்டை உச்சியில் 23-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும்.

    செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். மேலும் கார்த்திகை தீபத்திற்காக திரி தயாரிக்கும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இதில் 300 மீட்டரில் தயாரிக்கப்படும் திரியை பணியாளர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள கொப்பரையில் வைப்பார்கள்.

    பின்னர் அதில் தயார் நிலையில் உள்ள 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றுவார்கள். இந்த எண்ணெய்யை திரி நன்றாக உறிஞ்சும். இந்த பணிகள் ஒரு சில நாட்களில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×