search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு

    நடப்பு மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
    நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். நடப்பு சீசனை முன்னிட்டு அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.

    தொடர்ந்து 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.

    கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி வருகிற 16-ந் தேதி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்படும்.

    இதனை தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.என்.நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18 படிகளுக்குகீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இரு மேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார். 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

    அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் தினசரி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சபரிமலையில் இந்த ஆண்டு 20 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கும் வகையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பம்பை, சன்னிதானத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 3 லட்சம் லிட்டர் சுக்கு வெள்ளமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநில டி.ஜி.பி. லோகநாத் பெகரா தெரிவித்தார்.

    ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் முதல் கட்டமாக 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு தங்களது சொந்த வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த நிலக்கல்லில் விசாலமான கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் மூலம் பக்தர்கள் பம்பைக்கு செல்வார்கள். 
    Next Story
    ×