search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிருங்கேரி சாரதா பற்றிய ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம்
    X

    சிருங்கேரி சாரதா பற்றிய ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம்

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.
    (ஸ்ரீவித்யாரண்யர் அருளியது)

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது. இதைப்படித்தால் சகல வித்தைகளும் வரும். மங்களங்களும் உண்டாகும். அந்த அஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

    ஸ்ரீசிருங்கேரியில் வசிப்பவளே! சுகர் முதலிய மகரிஷிகளால் சேவிக்கப்படுகிற பாத கமலங்களை உடையவளே! தனது அங்கங்களின் காந்தியால் திரஸ்கரிக்கப்பட்ட சந்திரனையும் இந்திரவாகனமான ஐராவதத்தை யும் உடையவளே, வாக்கு சக்தியை அளிப்பவளே, ஸ்ரீபரமசிவன், ஸ்ரீலட்சுமீபதி முதலிய சிறந்த தேவர்களின் சமூகங்களால் சந்தோஷமாய் பூஜிக்கப்படுகிற பிரம்ம தேவனின் மனைவியான சாரதே, வித்தையையும், சுத்தமான புத்தியையும் எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.
    கலியுகத்தின் ஆரம்பத்தில் சிறந்த தேவகணங்களால் பிரார்த்திக்கப்பட்டவரான ஸ்ரீபரமசிவன் வேதத்தில் கூறிய பாகங்களை உலகில் நன்கு நடைபெறச் செய்வதற்காக சன்னியாசி ரூபியான ஆதி சங்கரராக சிருங்கேரியில் வந்து உங்களை பிரதிஷ்டை செய்து பலவித ஸ்தோத்திரங்களால் துதித்து நமஸ்கரித்து சாரதாதேவியே! வித்தையையும் சுத்தமான முக்தியையும் எனக்கு சீக்கிரம் கொடுக்க வேண்டும்.

    பல ஜென்மங்களில் செய்த பாபக் கூட்டங்களை நாசம் செய்து, மேலும் சீக்கிரமாய் புண்ணியங்களின் குவியலைச் சேர்த்து வைத்து, வேதம் குரு இவர்களின் சொற்களில் ஆதரவையும் ஆஸ்தீக புத்தியையும், தேவதைகள், ஆசாரியன், வேதம் கற்ற பெரியோர்கள் இவர்களிடத்திலும், தங்களுடையதான மந்திரங்களின் சமூகத்திலும் நிரம்ப ஸ்திரமான பக்தியையும், வித்தையையும், சுத்தமான புத்தியையும், பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    வித்யா முத்திரை (ஞான முத்திரை), ஜெபமாலை, அமிர்தம் நிரம்பிய குடம் இவைகளால் விளங்குகின்ற ஹஸ்த பத்மங்களின் கூட்டத்தை உடையவளே! பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே! என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தங்கள் வர்ணாச்சரம் தர்மத்திற்கு உரிய கர் மானுஷ்டானத்தில் நிலைத்த மனதையும், அந்த அனுஷ்டானங்களை செய்வதற்கு தேகத்தில் நல்ல வலுவையும், நீண்ட ஆயுளையும், மூன்று உலகங்களாலும் அறியக்கூடிய புகழையும் பாபச் செயலிலிருந்து திரும்புதலையும், சாதுக்களின் சங்கத்தையும், நல்ல கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் எனக்கு கொடுப்பதோடு கருணைக் கடலான பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தாயே! தங்களுடைய பாத கமலத்தை முறைப்படி புஷ்பங்களால் பக்தியுடன் ஒரு சமயமும் பூஜிக்கவில்லை. மந்த புத்தி யுள்ளவனும், சுறுசுறுப் பற்றவனுமான நான் உங்களது குணங்களை சிறந்த சுலோகங்களால் பாடுவதற்கு சக்தியற்றவன். தங்களை சேவிக் காதவனான என்னிடத்தில் ஊமைக் குழந்தையினிடத்தில் தாய்போல் அளவற்ற கருணையைச் செய்து, பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! வித்தையையும் சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் எனக்கு கொடுக்க வேண்டும்.

    சாந்தி முதலிய மங்களத்தைச் செய்யும் சம்பதுக்களை எனக்கு அளிக்க வேண்டும். நித்திய, அநித்ய வஸ்து விவேகத்தையும், வைராக்கியத்தையும் (விஷயங்களில் ஆசையின்மையும்) மோட்சத்தில் ஆசையையும், லட்சுமியாலும், பார்வதியாலும் சேவிக்கத்தகுந்த நீ பிரயாசையின்றி கொடுக்க வேண்டும். வித்யாரண்யர் முதலிய சிறந்த யோகிகளின் கரகமலங்களால் பூஜிக்கப்பட்ட சரண கமலங்களை உடைய பிரம்ம பத்தினியான சாரதே! வித்தையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.

    சத் சித் என்ற சொரூபமாக இருக்கும் எனக்கு வேதார்த்தத்தை மனனம் செய்து நிதித்யாசனம் செய்வது (அதாவது அந்தப் பொருளை மனதில் நிறுத்திப் பார்ப்பது) இவைகளையெல்லாம் சீக்கிரம் சம்பாதித்து கொடுத்து அதனால் இந்த மனதை நிர்விகல்ப சமாதியில் எப்பொழுதும் ருசியுள்ளதாகவும் செய்து, துங்கா நதிக்கரையின் சமீபத்தில் விளங்குகின்ற சிறந்த கோவிலில் ஸ்ரீசக்கரத்தின் நடுவில் விளங்குகின்ற பிரம்ம தேவனின் பத்தினியான சாரதா தேவியே, வித்யையும் சுத்தமான புத்தியை சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.
    Next Story
    ×