search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்
    X

    முத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்

    அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

    பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

    ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால், பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    கனவில் தோன்றிய அம்மன்

    அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டார்.

    கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் தல மரம் ேவம்பு.

    தசரா விழா

    தசரா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மைசூர் தான். தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட வித, விதமான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேள வாத்தியங்கள் முழங்க ஒவ்வொரு குழுவினரும் ஆடி, பாடி ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைப்பர்.

    அம்பிகை 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது நவராத்திரி என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்று மக்கள் கூட்டம் கடல்போல காட்சி அளிக்கும்.

    இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்


    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் இத்தலத்தை அடையலாம்.
    Next Story
    ×