search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்
    X

    குலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்

    குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.
    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    11. குலசையில் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    12. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    13. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    14. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    15. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    16. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடை பெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    17. அம்மை போட் டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    18. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    19. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குலதெய்வமாக கருதுகிறார்கள்.

    20. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    21. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    22. குலசை கோவிலுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    23. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    24. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    25. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.



    26. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    27. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    28. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    29. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    30. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    31. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக் தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    32. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    33. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2-வது இடத்தில் உள்ளது.

    34. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    35. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம் மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    36. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    37. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    38. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    39. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    40. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    41. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    42. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    43. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    44. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    45. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    46. குலசையில் தீயில் இறங்கும் பூக்குழி விழா நடத்தலாமா என்று ஆலோசித்தனர். பக்தர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் ஆறுமுகநேரியில் தசரா குழுவினர் பூக்குழி விழாவை நடத்துகிறார்கள்.

    47. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    48. காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதை மிகச் சிறந்த நேர்ச்சையாக கருதுகிறார்கள்.

    49. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    50. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கைநிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.
    Next Story
    ×