search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழம்பெருமை மிக்க தாமிரபரணி
    X

    பழம்பெருமை மிக்க தாமிரபரணி

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.
    வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது.

    அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது. தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன. தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.

    இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது. மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. அந்தக் காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

    மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை. பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது. மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக் களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7-ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

    பாண தீர்த்த மகிமை


    சிவபெருமான் திரி புராசுரர்களை சம்ஹாரம் செய்தபோது, விஷ்ணு பாணமாக இருந்தார். அசுரர்களை சம்ஹாரம் செய்தபிறகும் பாணத் தின் வெம்மை தணியாமல் தகித்தபடியே இருந்தது. எனவே, சிவமூர்த்தி அந்த பாணத்தை கலம்பகர்த்த தடாகத்தில் வைத்துவிட்டார். அகத்தியர் திருவுள்ளமுவந்து விடையளிக்கத் தோன்றிய தாமிரபரணி கலம்பகர்த்த தடாகத்தில் வெள்ளமெனப் பாய்ந்து பாணத்தின் வெம் மையைத் தணிவித்தாள். எனவே, இந்த பாணதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரஹம் கிடைக்கும் என்று ஹயக்கிரீவர் திருவாய்மொழியாக தாமிரபரணி மஹாத்மியத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×