search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி சிறப்புகள் 30
    X

    தாமிரபரணி சிறப்புகள் 30

    தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.
    1. பூலோகத்திலிருக்கின்ற எவ்விதமான புண்ணியத் தீர்த்தங்களும் ஸ்ரீதாமிரபரணியின் ஒரு திவலையின் பதினாறில் ஒரு பாகத்திற்கும் இணையில்லாததே.

    2. பெரியோர்கள் மற்ற சாதாரண நதிகளைத் தீர்த்தம் என்று கூறலாம். ஆனால் அவற்றிலும் தாமிரபரணி என்ற எண்ணத்தைச் செலுத்தி தியானம் செய்தாலோ, நீராடினாலோ, இம்மகாநதியின் புண்ணியம் கிடைக்கும்.

    3. சம்சாரம் என்ற சமுத்திரத்தைத் தாண்ட விரும்புபவர்கள், அவனுடைய உயிர் நிலைகாலத்தில் ஒருமுறையாவது தாமிரபரணி மகாநதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    4. தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.

    5. சூரியன் சிம்மராசியில் வரும்போதெல்லாம், அகத்திய மாமுனியானவர் சகலமான தேவர்களோடும், முனிகளோடும், சித்த சிரோமணிகளோடும் மலய பர்வதத்தின் அடிவாரத்திலிருக்கின்ற நகாரணியம் தலத்திரத்திற்கு வந்து, சிறந்த மேன்மை பெறுவதற்காக மனதை அடக்கி பூஜை செய்து வருகின்றார்.

    6. ஆத்மஞானம் பெற விரும்புவோர் ஒருமுறையாவது புண்ணியமான ஸ்ரீதாமிரபரணியில் ஸ்நானம் செய்து கோஷ்டீசுவரரைப் பூஜை செய்ய வேண்டும்.

    7. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையும் விரும்புவோர் மகாபாவத்தைத் தொலைக்கின்ற பாபவிநாசத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    8. தாமிரபரணியில் உள்ள சாலா தீர்த்தம், தீபதீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், புடார்ச்சுன தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், பைரவ தீர்த்தம், சோம தீர்த்தம், வியாச தீர்த்தம், ரோமச தீர்த்தம், ஜோதிர்வன தீர்த்தம், சாயா தீர்த்தம், மந்திர தீர்த்தம், நான்கு அக்னி தீர்த்தங்கள், ஷிப்தபுஷ்ப தீர்த்தம், ராமதீர்த்தம், விஷ்ணுவன தீர்த்தம், கலச தீர்த்தம், ஸ்ரீபுர தீர்த்தம், ஸோமாரண்ய தீர்த்தம், சங்கம தீர்த்தம் ஆகிய இவை புராணங்களில் முக்கியத் தீர்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

    9. பிராணாயாமம், பஞ்சகவ்யம், சூட்சுமணை என்ற நாடியில் பிராணவாயுவை ஏற்றித் தவம் செய்தல், பிராஜாபத்யம், மலையிலிருந்து விழுதல், அக்னிப் பிரவேசம் ஆகிய பெருஞ்செயல்களால் மானிடர் பெறக்கூடிய பயனை தாமிரபரணி நதியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதன் மூலம் பெற முடியும்.

    10. ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் பூமிக்கு வாழ்வளிக்க வந்தவள். இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து வழங்குபவள். முக்திக்கு முத்தானவள் என்று வீரசேன மகாராஜனுக்கு சங்கமா முனிவர் கூறியுள்ளார்.

    11. தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகம் அன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேர பேறு பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.

    12. கங்கை நதி தன் பாப அழுக்கை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் வந்து அடைக்கலம் ஆகி விடுவாள். ஆகவே மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த இடத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

    13. சேர்ந்த பூ மங்கலத்தில் தாமிரபரணி நதியின் சங்கு முகத்தில் நீராடி கடலரசனும் அகத்திய பெருமானும் ரோமரிஷியும் நீராடி நற்கதியடைந்தனர்.

    14. தசரதனுக்கு ராமபிரான் தாமிரபரணியின் பாணதீர்த்தத்தில்தான் தர்ப்பணம் செய்தார். எனவே தாமிரபரணியில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் லட்சக்கணக்கானவர்கள் நீராடி நலம் பெறுகிறார்கள்.

    15. தாமிரபரணி வங்க கடலில் சேரும் சங்குமுகத்தில் நீராடினால் தங்களது பாவம் போய் விடும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பாணதீர்த்தம் போலவே சங்கு முகமும் ஒரு சிறந்த இடமாகும்.



    16. தாமிரபரணியில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது பாணதீர்த்தம், பாபநாச தீர்த்தம், ஊர்காட்டில் உள்ள கோடிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திரமோட்ச தீர்த்தம், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை தீர்த்தம் மற்றும் சங்குமுக தீர்த்தம் போன்ற தீர்த்தமாகும்.

    17. தாமிரபரணி நதி வங்க கடலில் கலக்கும் இடத்தில் சங்கு தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்தில் வந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தினால் மிகவும் நல்லது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிறைய ஆலயங்களுக்கு திருவிழா, கொடை விழா நடக்கும் போது இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.

    18. தாமிரபரணி ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

    19. தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீதாமிரபரணி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி ஐகத்குரு பாரதி தீர்த்தர் பூஜை செய்து கொடுத்துள்ள இந்த சிலைக்கு புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    20. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தாமிரசத்தும், மூலிகைகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் தாமிரபரணியில் நீராடினால் நோய்கள் குணமாகிறது.

    21. தாமிரபரணி நதிக்கரையில் நவ கைலாயமும், நவ திருப்பதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எந்த நதிக்கும் இத்தகைய சிறப்பு இல்லை.

    22. ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணி புனித நீரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    23. தாமிரபரணி ஆறு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயர பொதிகை மலையில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

    24. தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஐந்தும் முக்கிய நதிகளாகும். இதில் தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ் நாட்டிலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி நதிதான்.

    25. தாமிரபரணிக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, குற்றாலம் அமைந்துள்ள சித்தாறு, ராமநதி, கடனாநதி, உப்பாறு ஆகிய உபநதிகள் உள்ளன. தாமிரபரணியிலும், உப நதிகளிலும் 37 அணைக்கட்டுகள், 7 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு நதியிலும் இந்த அளவுக்கு அணைக்கட்டுகள் கிடையாது.

    26. தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 1082 மி.மீ. மழை பெய்கிறது. இதில் 50 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.

    27. தாமிரபரணி பல இடங்களில் மிக அகலமாக உள்ளது. சீவலப் பேரியில்தான் மிக அகலமாய் உள்ளது.

    28. தாமிரபரணியில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியுள்ள துணிகளை போட்டு விடாதீர்கள். அது குடும்பத்துக்கு தேவை இல்லாத தோஷங்களை ஏற்படுத்தி விடும்.

    29. தாமிரபரணி தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கடனா நதி பகுதியில் கரும்பாக இனிக்கும். சித்தாறு பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும். முறப்பநாடுக்கு பிறகு பளீர் வெள்ளை நிறமாக மாறி விடும்.

    30. தாமிரபரணி நதியில் காலை வைப்பதற்கு முன்பு, ‘‘தாயே உன்னைப் போற்றுகிறேன், என் பாவங்களைப் போக்கு’’ என்று கூறி வணங்கியபடி இறங்க வேண்டும். புனித நீராடும் போது குல தெய்வத்தை நினைத்து மானசீக வழிபாடு செய்து நீராட வேண்டும். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி புனித நீராடுவது அதிக பலன்களை அள்ளித் தரும்.
    Next Story
    ×