search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண் வைத்து பூஜை

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே இருந்த தாமிரத்தால் செய்யப்பட்ட அம்பு அகற்றப்பட்டு நேற்று முதல் செம்மண் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவுபெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், பக்தர்கள் கொண்டு வரும் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இது எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும்.

    சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவுபெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார்.

    கோவில் நிர்வாகம் சன்னிதானத்தில் வைத்து சிவப்பு, வெள்ளை என 2 பூக்கள் வைத்து சாமியிடம் உத்தரவு கேட்பார்கள். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். அந்த பொருளுக்கு தொடர்ந்து தினசரி பூஜையும் செய்யப்படும்.

    இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் சாமி வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப்பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாறு இங்கு 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

    இவ்வாறு இதற்கு முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய்நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி, அருகம்புல், மிளகு, கீழாநெல்லி வேர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி முதல் தாமிரத்தால் செய்யப்பட்ட 1½ அடி உயரமுள்ள அம்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது

    இந்தநிலையில் திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (வயது 37) என்பவரது கனவில் வந்த சிவன்மலை முருகன், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண் வைத்து பூஜை செய்ய சொன்னதாக தெரிகிறது. இதுபற்றி அவர் கோவிலுக்கு வந்து அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் பூ போட்டு பார்த்து வெள்ளை வந்ததால் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த அம்பு அகற்றப்பட்டு நேற்று முதல் ஒரு பையில் செம்மண் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

    மகாலட்சுமி ஏற்கனவே கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஆறுமுகத்துடன் சிவன்மலைக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×