search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு
    X

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி பல்வேறு வரலாறுகள் கூறப்பட்டு வருகிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா?

    தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன்.

    முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் புரியாத சந்தோஷம் கொண்டான். சிவபெருமானின் மாமனாராகத்தான் ஆகப் போவது அவனுள் ஏராளமான கர்வத்தை ஏற்படுத்தியது.

    ஒரு தடவை சிவனின் மாமனார் என்ற அகந்தையுடன் சிவனைப் பார்க்க கயிலைக்குச் சென்றார். ஆனால் அவனின் இறுமாப்பு நந்தி தேவனுக்கு நன்றாகவே புரிந்து போனது. சிவபெருமானைப் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார் நந்திதேவன். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தட்சனுக்கு கோபம் ஏற்பட்டது.

    “என்னை அனுமதிக்க மறுத்து அவமதிப்பதா? நான் யாரென்று காண்பிக்கிறேன் பார்” என்று கோபத்தில் கர்ஜனை முழக்கமிட்டவாறு அங்கிருந்து வெளியேறினான். தனது அரண்மனையில் மிகப் பெரிய யாகத்தை நடத்தினார். அதற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான்.

    ஆனால், வேண்டுமென்றே, சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை மட்டும் தட்சன் அழைக்கவில்லை. ஆனால், தனது கணவரைத் தனது தந்தை அவமானப்படுத்துவதை தாட்சாயினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தந்தையின் கர்வத்தைப் போக்கத் துடித்தாள். உடனே தனது உருவத்தை அகோரமாக மாற்றினாள் தாட்சாயினி. நேராக அங்கு கோபத்துடன் சென்று யாகத்தை அழித்து நாசமாக்கினாள். அத்துடன் தன் தந்தை தட்சனையும் அழித்து, தன் கோபத்தைப் போக்கிக் கொண்டாள். அப்படியே அந்த யாக நெருப்பில் குதித்து தனது உருவத்தைப் போக்கினாள்.

    இதனை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டார். அங்கு விரைந்து வந்து அங்காளியைத் தன் தோளில் சுமந்தவாறு ஆங்கார நடனம் ஆடினார். கோபம் உக்கிரமாக இருந்த காரணத்தால் அவரின் நடனத்தின் வேகம் பார்ப்பவரைக் கதிகலங்கச் செய்யும் வகையில் படுபயங்கரமாக இருந்து. சுழன்ற வேகம் தாங்காமல் அங்காளியின் கை ஒன்று துண்டாகிக் கீழே விழுந்து விட்டது அப்படி விழுந்த இடம்தான் தண்டகாருண்யம் என்ற மேல்மலையனூர் சக்திபீடம் என்பர்.
    Next Story
    ×