search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளியவை
    X

    பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளியவை

    பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளியவற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    யாருக்காகத் துன்பப்படக்கூடாதோ அவர்களுக்காக நீ துன்பப்படுகிறாய். இதிலே ஞானப்பேச்சும் பேசுகிறாய். இறந்தவர்கள்; வாழ்பவர்களாகிய இருவருக்குமே அறிஞர்கள் துயரப்படமாட்டார்கள்.
    *****
    கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வதுபோல, ஆத்மா, சிதைந்துபோன உடம்புகளைக் களைந்து விட்டுப் புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது.
    *****
    உனக்கு வேண்டாதவர், சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லுவார்கள். உன் வலிமையையும், திறமையையும் பழிப்பார்கள். அதைவிடக் கொடிய துன்பம் ஏது?
    *****
    உன் கடமை தொழில் செய்வது; அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவையல்ல. என்ன வரப்போகிறதென்று நினைக்காதே; அதற்காகத் தொழில் செய்யாமலும் இராதே.
    *****
    புத்தியுள்ளவன், இங்கு நல்ல செய்கை, தீய செய்கை இரண்டையுமே துறந்து விடுகிறான். செய்வதைத் திறமையாகச் செய்வதே யோகம்.
    *****
    புத்தியுடைய உண்மைப் பேரறிஞர்கள், தங்கள், செய்கை களுக்குக் கிடைக்கும் லாபத்தைத் துறந்து, பிறப்போடு பூட்டப்பட்ட விலங்குகளை நீக்கி ஆனந்தம் என்னும் பதவி அடைகிறார்கள்.
    *****
    மோகம் என்பது ஒருவகைக் குழப்பம். உனது அறிவு அதைக் கடந்து சென்று விடுமானால், அப்போது நீ கேட்டது, கேட்கப்போவது, இரண்டிலும் உனக்கு வேதனை வராது.
    *****
    மனிதன் ஒன்றை உணர்ச்சி பூர்வமாக நினைக்கும்போது அதில் ஒருவகைப் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதலால் ஆசை உண்டாகிறது. ஆசையால் கோபம் உண்டாகிறது.
    *****
    கோபத்தால் மயக்கம் வருகிறது; மயக்கத் தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுவதால் அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெடுவதால் அழிந்து போகிறான்.
    *****
    விருப்பு வெறுப்பில்லாமல் புலன்களை மனதால் ஆட்டி வைத்தபடி, தனக்குத் தானே விதி வகுத்துக் கொண்டு நடக்கும் மனிதன் ஆறுதலடைகிறான்.
    *****
    அமைதி வந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் ஓடிவிடுகின்றன. மனம் அமைதி அடைந்ததும், எவனுடைய அறிவும் ஒருமுகமாகி விடுகிறது.
    *****
    தன்வரைக்கும் திருப்தியடைகிறவன், தன்வரைக்கும் மகிழ்ச்சியடைகிறவன், எவனுக்கும் தொழில் இல்லை.
    *****
    உலகத்தில் உள்ள பொருட்களால் சுகமும் ஏற்படுகிறது; துக்கமும் ஏற்படுகிறது. காரணம் என்ன? அந்தப் பொருட் களுக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு. புத்தி உள்ளவன் அழியக்கூடிய விஷயங்களில் நாட்டம் செலுத்த மாட்டான்.
    *****
    எவனொருவன் உடம்பு நன்றாக இருக்கும் போதே, இந்தப் பிறப்பிலேயே, காமக் குரோதங்களால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கும் சக்தி உள்ளவனோ அவனுக்குப் பெயர்தான் யோகி. அவன்தான் நிம்மதியடைந்த மனிதன்.
    *****
    களங்கங்களை நீக்கியவர்கள்; சந்தேகத்தை அறவே ஒழித்தவர்கள்; மனத்தை முழுக்க முழுக்கக்கட்டுப்படுத்தியவர்கள்; முடிந்த அளவு எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பிரம்மானந்தத்தை அடைகிறார்கள்.
    *****
    எவனால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவனுக்கு எதுவுமே கிடைக்காது. எவன் மனத்தை ஒழுங்குப்படுத்தி ஜாக்கிரதையாக முயற்சி செய்கிறானோ, அவனுக்கு எல்லா யோகமும் கிட்டும்.
    *****
    அர்ஜுனா! பிரம்ம லோகத்திற்குக்கூட அழிவிருக்கிறது. ஆகையால், அங்கே செல்கிறவர்கள் கூட, மறுபிறவி எடுக்க வேண்டிவரும். ஆனால் என்னை அடைந்துவிட்டாலோ மறுபிறவியே கிடையாது.
    *****
    அங்கிங்கெனாதபடி எங்கும் என்னைக் காண்பவன், எல்லாமே என்னிடம் இருப்பதைக் காண்பவன் எவனோ அவன் கண்களுக்கு நான் காட்சி தருவேன். அது மட்டுமல்ல; அவனை நானும் கண்டு கொள்வேன்.
    *****
    சாப்பிடுவதில் ஒரு அளவு; நடமாட்டத்தில் ஒரு அளவு; காரியங்களில் ஒரு அளவு; தூக்கத்தில் ஒரு அளவு; விழித்திருப்பதில் ஒரு அளவு - இதுவே ஒருவகை யோகம். இதுவே துன்பம் இல்லாமலிருக்க வழி.
    *****
    ஆத்மாவுக்கு ஞானம் வந்துவிட்டால், அஞ்ஞானம் அழிந்துவிடும். அந்த ஞானம் சூரியனைப்போல் அந்தப் பொருளைப் பிரகாசமாகக் காட்டுகிறது.
    *****
    பரம்பொருள் என்னும் அந்தப் பரமாத்மாவின் தத்துவத்தில் சகலத்தையும் காணிக்கை வைத்து, தன் சொந்த அறிவாலேயே களங்கங்களைத் தீர்த்துக் கொண்டவர்கள், மறுபிறப்பில்லாத முத்தியை அடைகிறார்கள்.
    *****
    சகல ஞானங்களும் கைவரப் பெற்ற ஒருவன், தனக்குப் பிரியமான ஒன்று கிடைத்துவிட்டால், ஓகோ என்று குதிக்கவும் கூடாது; தான் விரும்பாததை அடைய நேர்ந்தால் அழவும் கூடாது.
    *****
    நல்லன காக்க, தீயன அழிக்க, அறத்தை நிலை நிறுத்த, ஒவ்வொரு யுகத்திலும் நான் வடிவமெடுக்கிறேன்.
    *****
    இது என் தெய்வீகம். என் பிறப்பும், செயலுமே தெய்வீகம். இதனை நன்றாக உணர்ந்தவன் இறந்து போனால், அவனுக்கு மறுபிறப்பு இல்லை. காரணம் அவன் என்னோடு சங்கமமாகி விடுகிறான்.
    *****
    ஆசையை விட்டு, அச்சத்தை விட்டு, கோபத்தை விட்டு, என் நினைவே ஆகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி, அறிவாலே தவம் செய்து பரிசுத்த மாகி என்னுடைய இயல்புகளை அடைந்தவர்கள் பலர்.
    *****
    எப்போதும் பற்றுதலை விட்டுச் செய்யக் கூடிய தொழில் எதுவோ, அதைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழிலைச் செய்கிறவன் தான், பரம்பொருளை அடைகிறான்.
    *****
    உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ அதையே மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். அவன் எதை நியாயப்படுத்துகிறானோ, அதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
    *****
    அர்ஜுனா! புலன்கள் மனத்தால் இழுக்கப்படாமல், மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, எவன் கரும யோகம் என்னும் தொழில் நிலையில் ஈடுபடுகிறானோ, அவன் சிறந்தவன்.
    *****
    Next Story
    ×