search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
    X

    சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

    சதுரகிரி மலையில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 12-ந் தேதி வரை செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 2 நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வோரிடம் அந்த பாட்டில் மீது ‘ஸ்டிக்கர்‘ ஒட்டி ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மலையில் இருந்து திரும்பியதும் அந்த பாட்டிலை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கம்பு ஊன்றிக்கொண்டு எளிதாக மலையேறுவதற்காக கம்புகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

    இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சதுரகிரி மலை ஏறுவதற்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் மற்ற நேரங்களில் தாணிப்பாறை வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அழகாபுரி சந்திப்பில் இருந்து தம்பிபட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை விலக்கு வழியாக லயன்ஸ் பள்ளி அருகே நிறுத்த வேண்டும்.

    ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து சேசபுரம், கோபாலபுரம், வத்திராயிருப்பு, பிள்ளையார்கோவில் சந்திப்பு, சேதுநாராயணபுரம் வழியாக அங்குள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல வேண்டும். மேலும் ராம்நகர், அமச்சியார் அம்மன் கோவில், பிள்ளையார்கோவில், மாவூத்து ஆகிய இடங்களிலும் வாகனங்களை நிறுத்தலாம்.

    தாணிப்பாறை விலக்கு, சிவசங்கு மடம், ராம்நகர் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. வத்திராயிருப்பு-தாணிப்பாறை விலக்கு முதல் தாணிப்பாறை அடிவாரம் வரை சென்றுவர மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மகாராஜபுரம் பிள்ளையார்கோவில் விலக்கு முதல்சிவசங்குமடம் வரையிலான வழித்தடமும், கிருஷ்ணன்கோவில் சந்திப்பு- வத்திராயிருப்பு - சேதுநாராயணபுரம் வரையிலான வழித்தடமும் ஒருவழி பாதையாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு வெளிமாவட்டங்களில் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,065 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.

    சதுரகிரி மலையில் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் காவல் துறைக்கும் சிரமம் உள்ளது. எனவே மலைப்பாதையில் தற்காலிகமாக கோபுரம் அமைத்துதரவேண்டும் என்று பி.எஸ்.என்.எல்.க்கு போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று உடனடியாக கோபுரம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×