search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும்
    X

    கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும்

    ஒரு ஆலயத்தில் நாள் முழுக்க 6 கால பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.
    ஆலயங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பூ, பழம், அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்வதுண்டு. அர்ச்சனை முடிந்து மூலவருக்கு தீபாரதனை காட்டப்படும் போது மனம் உருக வேண்டிக் கொள்வார்கள். அதோடு அவர்களது வழிபாடு முடிந்து விடுகிறது.

    சில பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு நைவேத்தியம் செய்வார்கள். அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். எல்லாரும், எல்லா வகை வழிபாடுகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. 90 சதவீத பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு ஆலயத்தை எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க 6 கால பூஜைகளிலும் எத்தனையோ விதமான வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள், கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

    தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

    சாமி சிலைகளுக்கு ஏன் இப்படி விதம் - விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன தத்துவம் - என்ன அறிவியல் உண்மை அடங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

    எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.



    அந்த வகையில் சிவனை அபிஷேகப் பிரியர் என்றும், விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறியுள்ளனர். பொதுவாகவே கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.

    எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

    அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்களையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

    எள் எண்ணெய் - 1 லிட்டர், பஞ்ச கவ்வியம் - 5 லிட்டர், மாவு வகைகள் ஒவ்வொன்றும் 1 கிலோ, மஞ்சள் பொடி 200 கிராம், பசும்பால் 7 லிட்டர், தயிர் 15 லிட்டர், தேன் 500 கிராம், நெய் ஒரு கிலோ, நெல்லி முள்ளிப்பொடி - 300 கிராம், கரும்புச்சாறு - 4 லிட்டர், பன்னீர் - 500 கிராம், அன்னம் - 5 கிலோ, வாசனை திரவிய தீர்த்தம் - 20 லிட்டர் என்ற முறையில் தான் அபிஷேகத்துக்குரிய திரவியங்களின் அளவு இருக்க வேண்டும்.

    பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 20 வாழைப்பழம், ஒரு பெரிய பலாபழம், 15 மாம்பழம் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டும். அதுபோல பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி கோமூத்திரம், பால், தயிர், நெய்) தயாரிப்பது பற்றி கோவில் குருக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

    அபிஷேகத்துக்குரிய திரவியங்களை இத்தகைய அளவுகளில் தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த அபிஷேகப் பொருட்களை சுவாமி முன்பு, எப்படி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட விதிமுறை உள்ளது. இது பற்றி சிந்தியாகமத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும். நடுவில் அபிஷேகத்துக்குரிய பால் வைக்க வேண்டும். வடக்கில் தேன், தெற்கில் நெய், மேற்கில் நாட்டுச் சர்க்கரை, கிழக்கில் தயிர் வைக்க வேண்டும்.

    வாயு மூலையில் மாம்பழம், நிருதி மூலையில் பலாப்பழம், அக்னி மூலையில் வாழைப்பழம், ஈசான மூலையில் வாசனை திரவிய தீர்த்தம் வைத்தல் வேண்டும்.

    அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆகமப்படி திரவியங்களை வரிசைப்படி எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் மற்ற ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

    மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகங்களையும் பார்க்க கூடாது என்று நம் முன்னோர்கள் தடை விதித்ததற்கு காரணம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

    ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

    நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மூலவர் சிலைகளில் இருந்து வெளிப்படும ஆற்றல் பக்தர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பெயரளவுக்கு சில அபிஷேகங்களை மட்டுமே பக்தர்கள் பார்க்க செய்வார்கள்.

    நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

    அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

    தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.

    அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
    பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

    குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×