search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியை ஊர்வலமாக கொண்டு வருவதையும், வனபத்ரகாளியம்மன் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுவதையும் படத்தில் காணலாம்
    X
    கொடியை ஊர்வலமாக கொண்டு வருவதையும், வனபத்ரகாளியம்மன் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுவதையும் படத்தில் காணலாம்

    மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றம்

    ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை, லட்சார்ச்சனை, கிராமசாந்தி முனியப்பன் பகாசூரன் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து தனசேகர குருக்கள், கண்ணன் ஆகியோர் யாக பூஜைகளை செய்தனர். காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பாக அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன் செய்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பாக கொடியேற்று விழா நடந்தது. இதற்காக சிம்ம வாகன கொடி தேக்கம்பட்டியில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது. அங்கு கோவில் சார்பாக பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் மீண்டும் அங்கிருந்து நாதஸ்வர இசை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    அம்மன் சன்னதியில் சிம்மவாகன கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பகல் 12 மணிக்கு கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மா தாயே, பராசக்தி என்று பக்தி கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஊர் கவுடர்கள் திப்பையன், மூர்த்தி, சிவராமலிங்கம், கோவிந்தராஜ், சண்முகசுந்தரம், குருந்தமலை கோவில் முன்னாள் அறங்காவலர்கள் நடராஜன், ராஜேந்திரன் மற்றும் தேக்கம்பட்டி கிராம மக்கள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×