search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தமிழகத்தில் எங்கும் இல்லாத அகோரமூர்த்தி
    X

    தமிழகத்தில் எங்கும் இல்லாத அகோரமூர்த்தி

    திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.
    திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.

    இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம்.
    இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.

    அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார்.

    எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார்.

    சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “தூண்டு சுடர் மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.

    இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:-

    மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.

    இதுபற்றி நந்தி, திருவெண் காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங் களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடி யில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவே தாரண்யே சுவரர் ஆட்கொண்டார். இன் றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம்.

    மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது.

    அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.
    Next Story
    ×