search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை ராஜவல்லிபுரம் அழகிய செப்பறை கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லை ராஜவல்லிபுரம் அழகிய செப்பறை கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம்

    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. கடந்த 14-ந்தேதி அழகியகூத்தருக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது.

    கடந்த 17-ந்தேதி காலையில் அழகியகூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். இரவில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலையில் பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நேற்று நடந்தது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார். 
    Next Story
    ×