search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
    X

    திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விசாக தினத்துக்கு முந்தைய நாளான 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    விசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவின் மறுநாளான 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×