search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜெனகை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஜெனகை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதம் மேற்கொண்டனர்.
    சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர். விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கோவில் முன்பாக யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணேசபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தனர்.

    பின்பு கோவிலில் உள்ள கம்பத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன. தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    திருவிழாவில் தினமும் அம்மன் ரிஷபம், யாழி, சிம்மம், காமதேனு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பூமேட்டு தெருவில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து இரவு சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.வி.எம் குழும தலைவர் முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி மெட்ரிக்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு அம்மன் யாழி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 9-ம்நாள் காலை பால்குடம், பிற்பகல் 2 மணி முதல் அக்னிச்சட்டி எடுத்தல் நடைபெறுகிறது.

    இரவு பூப்பல்லக்கும், மறுநாள் மாலை மந்தைக்களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டமும், 17-ம்நாள் வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி லதா, தக்கார் சக்கரையம்மாள், கணக்கர் பூபதி, மற்றும் ஆலய பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×