search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்
    X

    பாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்

    நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.
    நாம் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே தீர்த்து விடுவது நல்லது. இல்லையெனில் அந்த பாவங்கள் மூட்டையாக சேர்ந்து அடுத்தப்பிறவியிலும் தொடரக்கூடும்.

    அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சரி.... இந்த ஜென்மத்து பாவங்களையும், கடந்த பிறவிகளில் செய்த பாவங்களையும் எப்படி போக்குவது? இதற்காக நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக, மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைவதே அந்த எளிய வழி.

    திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது.

    அந்த வரலாறுகளை எல்லாம் சைவ எல்லப்ப நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலில் பாவம் தீர்த்த சருக்கம் எனும் பகுதியில் மிக விளக்கமாக எழுதியுள்ளார். அதை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் எளிய தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.

    ஒரு தடவை பிரம்மனிடம் சென்ற அஷ்ட வசுக்கள், தாங்கள் தவம் இருந்து வரம் பெற்றது பற்றி பெருமையாகப் பேசினார்கள். அதைக் கேட்டதும் பிரம்மனுக்கு கோபம் வந்து விட்டது. “உங்களை துன்பம் பிடிக்கும்” என்று சாபமிட்டார். இதனால் வேதனை அடைந்த அஷ்ட வசுக்கள், தங்கள் மீதான இந்த சாபம் எப்போது தீரும் என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, “சிவபெருமானால் உங்கள் சாபம் தீரும்” என்றார்.

    இதையடுத்து அஷ்ட வசுக்கள் கங்கை கரைக்கு சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவர்கள் முன்பு தோன்றிய சிவபெருமான், “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அஷ்ட வசுக்கள் தங்களுக்கு பிரம்மன் விதித்த சாபம் பற்றி கூறினார்கள். உடனே சிவபெருமான் அவர்களிடம், “திருவண்ணாமலைக்கு செல்லுங்கள். அங்குள்ள மலையின் மீது ஆளுக்கொரு பக்கமாக 8 திசைகளிலும் அமர்ந்து தவம் செய்யுங்கள். ஒருநாள் உங்களுக்கு அந்த மலை 8 முக வடிவத்துடன் காட்சித் தரும். அந்த காட்சியைப் பார்த்ததும் உங்கள் சாபம், பாவம் எல்லாம் தீர்ந்து விடும்” என்றார்.

    அதன்படி அஷ்ட வசுக்கள் திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்து தங்களது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். பிரம்மனிடம், ஒரு தடவை இந்திரன் ஒரு வேண்டுகோள் வைத்தான். உலகில் உள்ள எல்லா அழகான பெண்களையும் ஒன்று சேர்த்து மிகவும் பேரழகு வாய்ந்த பெண்ணை படைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    அதன்படி பேரழகு வாய்ந்த பெண்ணை பிரம்மன் படைத்தான். அந்த பெண்ணுக்கு “திலோத்தமை” என்று பெயரிட்டனர். அவளது அழகைப் பார்த்து, படைத்த பிரமமனுக்கே ஆசை வந்து விட்டது. காமத்தில் மூழ்கிய பிரம்மன் தனது அறிவை இழந்தார். திலோத்தமையை விரட்டினார். பிரம்மனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினாள். ஆனால் பிரம்மன் விடாமல் துரத்தினார். இதனால் திலோத்தமை வேறு, வேறு வடிவம் எடுத்து பிரம்மன் பார்வையில் இருந்து தப்பினாள்.

    ஒரு கட்டத்தில் அவள் மான் வடிவம் எடுத்து துள்ளி, துள்ளி ஓடினாள். அவளை கண்டு கொண்ட பிரம்மா, கலைமான் வடிவம் எடுத்து பின் தொடர்ந்தார். இதையடுத்து திலோத்தமை கிளியாக மாறிப் பறந்தார். உடனே பிரம்மாவும் ஆண் கிளியாக மாறிப் பின்னே பறந்தார். இதனால் அவள் தவித்தாள். அடுத்து என்ன வடிவம் எடுப்பது என்று திலோத்தமை யோசித்தப் போது, அவள் கண்ணில் திருவண்ணாமலை மலை தெரிந்தது.



    “அண்ணாமலையாரே.... காப்பாற்றும்” என்று தஞ்சம் அடைந்தாள். அடுத்த நிமிடம், மலை வெடித்தது. உள்ளே இருந்து ஈசன் வெளியில் வந்தார். வில் ஏந்திய கோலத்தில் வேடன் போன்று நின்ற அண்ணா மலையாரை சுற்றி வந்து திலோத்தமை சரண் அடைந்தாள். அவளை விரட்டி வந்த பிரம்மன், திடீரென தன் எதிரே ஈசன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.

    திலோத்தமை மீது கொண்ட மையல் அவரிடம் இருந்து நீங்கியது. அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது சிவபெருமான் அவரிடம், “நீ படைத்த பெண் மீது நீயே மையல் கொண்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். கற்ப கோடி காலம் தாண்டினாலும் அந்த பாவம் தீராது. ஆனாலும் இந்த மலையை வணங்கியதால் உன் பாவம் நீங்கியது” என்று அருளினார்.

    இதே போன்றுதான் ஒரு தடவை விஷ்ணுவின் பாவத்தையும் அண்ணாமலையார் நீக்கினார். ஊழிக்காலம் முடிந்து இருள் நீங்கிய பிறகு அனைவரும் சிவபெருமான் ஒளியால் உறக்கத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் விஷ்ணு மட்டும் உறக்கத்தில் இருந்து எழாமல் இருந்தார். அவர் எழுந்து பிரம்மனை படைத்தால்தான் உலகைப் படைக்க முடியும். அதை செய்யாமல் தூங்கி விட்டதால், தன்னை பாவம் பிடித்து விட்டதாக விஷ்ணு கருதினார்.

    அந்த பாவத்தை போக்குவதற்காக அண்ணாமலையாரை நினைத்தார். அடுத்த வினாடி வெண்ணிற எருதின் மீது சிவபெருமான் தோன்றினார். திருவண்ணாமலைக்கு சென்று வழிபடும்படி கூறினார்.அதை ஏற்று விஷ்ணு திருவண்ணாமலைக்கு வந்து பூஜைகள் செய்து தன் மீதான வினைகளைத் தீர்த்துக் கொண்டார்.

    சந்திரன் 27 நட்சத்திரங்களையும் திருமணம் செய்தார். அந்த 27 பேரில் ரோகிணி மீது மட்டும் அவர் மிக, மிக விருப்பம் உடையவராக இருந்தார். இதனால் மற்ற 26 நட்சத்திரங்களும் வேதனை அடைந்தன. இது சந்திரனுக்கு பாவமாக மாறியது. அது மட்டுமின்றி தச்சன் கொடுத்த சாபமும் பலித்தது. அந்த சாபத்தால் சந்திரன் 15 நாள் வளர்வதாகவும், 15 நாள் தேய்வதாகவும் இருந்தான்.

    திருவண்ணாமலைக்கு வந்து வழிபட்ட பிறகே தன் மீதான சாபத்தையும், பாவத்தையும் சந்திரனால் போக்கிக் கொள்ள முடிந்தது. ஒரு தடவை சூரிய பகவான் தனது தேரை திருவண்ணாமலை நேர் விண்ணில் செலுத்திக் கொண்டிருந்தான். அப்போது அண்ணாமலையார் கோபத்தில் மலையை வெடித்துக் கொண்டு வெளியில் வந்தார். இதனால் சூரிய பகவானின் தேர் எரிந்து சாம்பலானது.

    அதன் பிறகே சூரிய பகவானுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. ஈசன் தலை உச்சி மீது தேரை செலுத்தியதால் பாவம் ஏற்பட்டதாக உணர்ந்தான். திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் செய்து தனது பாவத்தை போக்கினார். அன்று முதல் சூரியன் அண்ணாமலையார் உச்சி மீது வருவதில்லை. சுற்றியே செல்கிறார்.

    இப்படி திருவண்ணாமலை தலத்துக்கு வந்து தங்களது பாவத்தை தீர்த்துக் கொண்டவர்கள் ஏராளம். தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் மட்டுமல்ல சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். பதினென் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் வாழ்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். அதோடு இன்றும் அவர் அங்கேயே உறைந்துள்ளார். 
    Next Story
    ×