search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி - மட்டுவார் குழலம்மைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி
    X

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி - மட்டுவார் குழலம்மைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி

    சித்திரை தேர் திருவிழாவையொட்டி தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மைக்கு நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செய்து வழிபட்டனர்.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில், கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தொடர்ந்து 5-வது நாளான நேற்று முன்தினம் சிவ பக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    6-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் தாயுமான சுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை கல்யாண மாப்பிள்ளையான தாயுமானசுவாமிக்கும், மணப்பெண்ணான மட்டுவார்குழலம்மைக்கும் மங்கள ஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி(நலுங்கு வைத்தல்) நடைபெற்றது. தொடர்ந்து இருவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் மட்டுவார் குழலம்மை நந்தவனத்தில் உள்ள முக்குளம் சென்று தவசு பூஜை செய்து காத்திருந்தார். தொடர்ந்து தாயுமானசுவாமி சீர்வரிசை பொருட்களுடன் முக்குளம் சென்று அம்பாளுக்கு கொடுத்து, அலங்காரம் செய்தவுடன் மலைக்கோட்டை உள்வீதியில் திரு வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது.

    தொடர்ந்து 10 மணிக்கு மேல் தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 10.30 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. இதையடுத்து தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாணசம்பந்த சுவாமிகள் திருநாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கல்யாணத்தை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலி சரடு ஆகியவை வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் மொய் செய்து வழிபட்டனர். பின்னர் அப்பளம், வடை, பாயாசத்துடன் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் திருதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
    Next Story
    ×