search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், 3 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது எடுத்த படம்.
    X
    பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், 3 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது எடுத்த படம்.

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    மனிதனின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை படைத்த பிரம்மபுரீஸ்வரருக்கு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருப்பட்டூரில் கோவில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பங்குனி தேரோட்ட திருவிழாவிற்கு கடந்த 21-ந் தேதி கொடியேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்கியது. தினமும் கேடயம், பூத வாகனம், மயில்வாகனம், கைலாச வாகனம், அன்னவாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாள் அன்று இரவு 7 மணிக்கு தனித்தனி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வணங்கினர். இதையடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.


    பிரம்மபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. காலை 8 மணியளவில், முதல் தேரில் முருகன், வள்ளி தெய்வானையும், 2-வது தேரில் பிரம்மபுரீஸ்வரர், உடனுறை பிரம்மபுரீஸ்வரியும், 3-வது தேரில் சண்டிகேஸ்வரர் மற்றும் அம்பாளும் எழுந்தருளினர். தொடர்ந்து 8.40 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

    விழாவில் திருப்பட்டூர், எதுமலை, சனமங்கலம், சிறுகனூர், மணியங்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 10-ம் நாளான இ்ன்று (வெள்ளிக்கிழமை) மதியம் தீர்த்தவாரியும், மாலை நடராஜர் புறப்பாடு மற்றும் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ம் நாளான நாளை (சனிக்கிழமை) பிட்சாடனார் புறப்பாடும், அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) சண்டிகேஸ்வரர் புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×