search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை தொடங்குகிறது

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக் கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தி பூஜைகள் செய்தார்.

    15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது. இரவு அத்தாழ பூஜைக்குப் பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

    நாளை முதல் (புதன்கிழமை) திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கோவில் முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார். திருவிழா நாட்களில் தினமும் மதியம் உத்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். விழாவையொட்டி, சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். ஆராட்டு நிறைவு பெற்று மீண்டும் மேளதாளம் முழங்க புத்தாடை உடுத்தி, யானை மீது வைத்து சாமி விக்ரகம் சன்னிதானத்திற்கு பவனியாக கொண்டு வரப்படும் ஐயப்ப சாமி விக்ரகத்திற்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×