search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் கோவில் எட்டுத்திக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்துக்கு கோவில்யானை மரியாதை செலுத்தியகாட்சி
    X
    திருவானைக்காவல் கோவில் எட்டுத்திக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்துக்கு கோவில்யானை மரியாதை செலுத்தியகாட்சி

    திருவானைக்காவல் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. 19-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இக்கோவிலில் பங்குனி தேரோட்டம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 9 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடி மரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி ஏக சிம்மாசனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


    விழாவையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

    விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு பூத வாகனம், காமதேனு வாகனத்திலும், 17-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 18-ந் தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதியுலா வருகின்றனர்.

    பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 1-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. ஏப்ரல் 2-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி, அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்்தில் வீதியுலா வருகின்றனர்.
    Next Story
    ×