search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

    பங்குனி மாத பூஜை, பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.
    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. இந்த பூஜை நாட்களில் தென்மாநிலங்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்-வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

    நடை திறப்பையொட்டி அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    மறுநாள் (15-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசபூஜை, களபாபிஷேகம் போன்றவையும் நடைபெற உள்ளன. 19-ந் தேதி இரவில் பூஜைகள் நிறைவடைந்த பின்பு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.

    பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவையொட்டி வருகிற 20-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

    21-ந் தேதி காலையில் நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் தினமும் மதியம் உற்சவ பலி பூஜை நடைபெறும். 29- ந் தேதி இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு ஆறாட்டு வைபவமும் நடைபெறும். முன்னதாக அன்றைய தினம் காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து ஐயப்ப விக்ரகம் யானை மீது பவனியாக பம்பைக்கு எடுத்து வரப்படும்.

    ஆறாட்டு நிறைவு பெற்று, மீண்டும் மேளதாளம் முழங்க சாமி விக்ரகம் சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் முடிந்த பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் கோவில் திருவிழா தொடர்ச்சியாக வருவதால் வருகிற 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தொடர்ச்சியாக 17 நாட்கள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.
    Next Story
    ×