search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட
    X
    சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட

    இன்று மாசி திருவிழா தேரோட்டம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

    சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் மாசி திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்க திருச்செந்தூரில், பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புகழ் மிக்க மாசி திருவிழா, கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    9-ம் திருநாளான நேற்று காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முன்னதாக மேல கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர் மீண்டும் மேல கோவில் சேர்ந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகர் சிறிய தேரிலும், சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பெரிய தேரிலும், தெய்வானை அம்பாள் பெரிய தேரைவிட சற்று சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். முதலில் விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வருவார்கள். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெறும்.


    தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாளை(வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×