search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி சண்முகர் - வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளியதையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் காணலாம்.
    X
    சுவாமி சண்முகர் - வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளியதையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் காணலாம்.

    திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திய கோலத்தில் வீதி உலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திய கோலத்தில் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 7-ம் திருநாளான நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் காலை 9.05 மணிக்கு சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    பின்னர் மாலையில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்திய கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி பின்புறம் சிவ அம்சமாக நடராஜர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளை சாத்திய கோலத்தில் பிரம்மன் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து, பச்சை சாத்திய கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    9-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா, இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

    மாசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு வருகின்றனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, முருக பெருமானின் திருநாமத்தை உச்சரித்தும், திருப்புகழை பாடியும் வழிபடுகின்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×